சென்னையில் உயிரிழந்த காகங்களில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி
சென்னையில் சமீப காலமாக உயிரிழந்த காகங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், H5N1 வகை பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தித் துறை அமைச்சகம், தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னையில் பறவை காய்ச்சல் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பறவைகள் இறந்ததாக பதிவான பகுதிகளில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கவும், உயிரியல் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் கடுமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வழக்கத்திற்கு மாறாக பறவைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்பட்டால், அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த பறவைகளை நேரடியாக கைகளால் தொடக் கூடாது என்றும், உயிரிழந்த பறவைகளை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்கவோ அல்லது எரித்துவிடவோ வேண்டும் என மத்திய கால்நடைத் துறை தெளிவாக அறிவுறுத்தியுள்ளது