சுற்றுலா பயணிகளுக்கான ராட்சத பலூன் முயற்சி – பலத்த காற்றால் வயல்வெளியில் அவசர இறக்கம்
மதுரை மாவட்டம் நாகமலை சுற்றுவட்டாரப் பகுதியில் சோதனைக்காக இயக்கப்பட்ட ராட்சத பலூன், அருகிலுள்ள வயல்வெளியில் தரையிறங்கியதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
பாலமேடு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்று, மாவட்டத்தின் பல்வேறு இடங்களை வானிலிருந்து பார்வையிடும் நோக்கில் இந்த ராட்சத பலூன் உருவாக்கப்பட்டது.
‘ஸ்கை வால்ட்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன், சோதனைப் பயணம் நடத்தப்பட்டது.
அந்த சோதனை ஓட்டத்தின் போது, ஏழு பேர் கொண்ட குழு பாலமேட்டிலிருந்து ராட்சத பலூனில் ஏறி வானில் பறந்து வந்தனர்.
இந்நிலையில், திடீரென காற்றின் வேகம் அதிகரித்ததையடுத்து, வடபழஞ்சி அருகே உள்ள வயல்வெளியில் பலூன் பாதுகாப்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பலூன் தரையிறங்கியதை அருகில் இருந்த பொதுமக்களும் விவசாயிகளும் ஆச்சரியத்துடன் கவனித்தனர். பின்னர் பலூனில் பயணித்தவர்கள் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.