மதுரை மாமன்றக் கூட்டம் 10-ந் தேதி நடத்தப்படும் – மாநகராட்சி அறிவிப்பு
மதுரை மாநகராட்சியில் மேயர் தேர்வு தொடர்பான நீண்டகால இழுபறி காரணமாக வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ள நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் எதிரொலியாக, வரும் 10-ந் தேதி மாமன்றக் கூட்டம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் சுமார் 200 கோடி ரூபாய் அளவிலான சொத்து வரி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, மாநகராட்சி மேயர், மண்டலத் தலைவர்கள் மற்றும் பல்வேறு குழுத் தலைவர்கள் தங்களது பதவிகளை விலகிக் கொண்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் மேயரின் கணவர், ஒரு மண்டலத் தலைவரின் கணவர், உதவி ஆணையர் உள்ளிட்ட 27 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். அதேபோல், 25-க்கும் மேற்பட்ட மாநகராட்சி நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் அல்லது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மேயர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டதுடன், மூன்று மாதங்களுக்கு மேலாக மாமன்றக் கூட்டம் நடைபெறாததால், மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சூழலில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, வரும் 10-ந் தேதி மாமன்றக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் நாகராஜன், பொறுப்பு மேயராகக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது