வழக்கில் சிக்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துகள் மீட்பு – அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை
நீதிமன்ற வழக்கில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) உடைய சொத்துகளை மீட்க, அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துகள், 1955-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் உருவாக்கப்பட்டவை. காலப்போக்கில், அந்த அறக்கட்டளையின் நிர்வாக கட்டுப்பாடு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திடம் மாற்றப்பட்டது. பின்னர், அந்த சொத்துகளிலிருந்து வரும் வருவாயை ரேங்கோ பில்டர்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக, அந்த நிறுவனம் 180 கிரவுண்ட் நிலம் முழுவதும் தங்களுக்கே சொந்தம் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில், நிறுவனத்துடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர 60 கோடி ரூபாய் வழங்க காங்கிரஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
அதன்படி, 30 கோடி ரூபாயை தமிழக காங்கிரஸ் கமிட்டியும், மீதமுள்ள 30 கோடி ரூபாயை டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் வழங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேஷனல் ஹெரால்ட் நாளிதழுக்கு கடன் வழங்கிய பின்னர் அந்த நிறுவனத்தை காங்கிரஸ் கைப்பற்றியதுபோல், காமராஜரால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் அறக்கட்டளையையும் டெல்லி மேலிடம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் கட்சியின் உள்ளகத்திலும் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.