காங்கிரஸை ஒதுக்கி திமுக முன்னெடுத்த பேச்சுவார்த்தை – விசிக, இடதுசாரிகளுடன் தனிப்பட்ட ஆலோசனை
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை அழைக்காமல், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தனியாக ஆலோசனை நடத்தியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தேர்தல் அரசியல் சூடு பிடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, இண்டி கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய இரு அணிகளிலும் உள்ள கட்சிகள் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில், புதுச்சேரி லப்போர்த் சாலையில் அமைந்துள்ள திமுக தலைமையகத்தில், அக்கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், விசிக மாநில செயலாளர் அரிமா தமிழன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், இண்டி கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த கூட்டத்திற்கான அழைப்பு வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் உறவில் தற்போது கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, திமுக நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டம் பற்றி தங்களுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த புதுச்சேரி மாநில திமுக தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, இது வழக்கமான மரியாதைச் சந்திப்பே தவிர வேறு எதுவுமில்லை என்றும், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி கட்சி பிரதிநிதிகளை சந்தித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். விரைவில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் சந்திப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.