தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்
தமிழ்நாட்டில் ரூ.35,700 கோடி மதிப்பில் பல்வேறு ரயில்வே வளர்ச்சி பணிகள் தற்போது நடைமுறையில் உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்வே சார்ந்த திட்டங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த அமைச்சர், தமிழகத்தில் மிகப்பெரிய அளவிலான முதலீட்டுடன் ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
இந்த திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்றும், குறிப்பாக ரயில்வே பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு ரயில்வே துறையில் இதுவரை இல்லாத அளவில் ரூ.7,611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை ஒப்பிடும் போது சுமார் ஒன்பது மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டார்.