புத்தகங்களைத் தாங்க வேண்டிய கைகளில் போதைப்பொருளா? – அண்ணாமலை கடும் கண்டனம்
சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர், பள்ளிக்குள் கஞ்சா பொட்டலத்துடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சிக்காலத்தில் கல்வி நிலையங்களே போதைப்பொருள் நடமாட்டத்திற்கான இடங்களாக மாறியிருப்பது, தமிழ்நாட்டிற்கு அவமானம் என குறிப்பிட்டுள்ளார். கல்வி புத்தகங்கள் இருக்க வேண்டிய மாணவர்களின் கைகளில் கஞ்சா இருப்பது, வருங்கால தலைமுறையின் எதிர்காலம் குறித்து கடும் பயத்தையும் கவலையையும் உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் கஞ்சா போதையால் நடைபெறும் குற்றச்செயல்கள் அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக கூறிய அண்ணாமலை, சமீபத்தில் திருத்தணி ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில், இளம் சிறுவர்கள் வட மாநில இளைஞரை அரிவாளால் தாக்கிய காணொளி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்ததாக நினைவூட்டினார். இவ்வாறான சம்பவங்களுக்குப் பிறகாவது திமுக அரசு கஞ்சா வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கு மாறாக போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு கட்சியில் பதவிகள் வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவார் என்று நம்புவது தவறான எதிர்பார்ப்பே எனவும் அவர் விமர்சித்தார்.
அடிப்படை வசதிகள் கூட முழுமையாக இல்லாத அரசு பள்ளிகளில் தற்போது போதைப்பொருள் நடமாட்டமும் சேர்ந்துவிட்டதாகக் கூறிய அவர், இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்படி உயரும் என கேள்வி எழுப்பினார்.
மேலும், 16 வயது சிறுவனுக்கே கஞ்சா எங்கு கிடைக்கும் என்பது தெரிந்திருக்க, சென்னை மாநகர காவல்துறைக்கு அது தெரியாதது எட்டாவது உலக அதிசயம் என அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக பெற்றோர்களை நேரடியாகக் கேட்டுக்கொண்ட அவர், திமுக ஆட்சிக்காலத்தில் குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டுமல்ல, தமிழகத்தின் முழு எதிர்காலத்தையும் பெற்றோர்களே காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என தெரிவித்தார். அரசு பள்ளி வரை ஊடுருவியுள்ள கஞ்சா புழக்கம், விரைவில் வீடுகளுக்குள் நுழையாமல் இருக்காது என்றும் எச்சரித்தார். செயலற்ற திமுக அரசையோ, அதன் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல்துறையையோ இனியும் நம்ப முடியாது என்றும், குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த போதைப்பொருள் ஆதிக்கம் கொண்ட திமுக ஆட்சி தொடருமானால், தமிழக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலமே பெரிய கேள்விக்குறியாக மாறிவிடும் என அண்ணாமலை எச்சரித்துள்ளார்