அரசு வேலை வழங்கலில் முறைகேடு குற்றச்சாட்டு – மருத்துவ ஆய்வு நிபுணர்கள் சாலை மறியல்
அரசு பணியிடங்கள் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, மருத்துவ ஆய்வு நிபுணர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, மருத்துவ ஆய்வு நிபுணர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி அமைத்தும், சாலையில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர்.
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்ற மருத்துவ ஆய்வு நிபுணர்கள், செய்தியாளர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை விளக்கினர். அதில், அரசாணை எண் 262-ஐ ரத்து செய்ய வேண்டும், மருத்துவ ஆய்வு நிபுணர்களுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யாமல், வெறும் ஒரு ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
அத்துடன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என மருத்துவ ஆய்வு நிபுணர்கள் வலியுறுத்தினர்.