இந்திய பயணிகளுக்கான சுங்க வரி சலுகை அதிகரிப்பு – பெண்கள் 40 கிராம் தங்க நகைகளுடன் வர அனுமதி
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் கொண்டு வரும் பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு வரம்பை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம், இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் இனி அதிக மதிப்புள்ள பொருட்களை சுங்க வரி இல்லாமல் கொண்டு வர முடியும்.
பழைய பயண உடைமைகள் விதிகளுக்கு மாற்றாக, “பயண உடைமைகள் விதிகள் – 2026” என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிகளின் படி, இந்தியாவிற்கு வரும் இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இனி ரூ.75,000 மதிப்புள்ள பொருட்களை சுங்க வரி செலுத்தாமல் கொண்டு வரலாம். முன்னதாக இந்த வரம்பு ரூ.50,000 ஆக இருந்தது.
அதேபோல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சுங்க வரி விலக்கு வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.15,000 ஆக இருந்த வரம்பு, தற்போது ரூ.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் ஒரு ஆண்டிற்கு மேலாக தங்கியிருந்து இந்தியாவிற்கு திரும்பும் பயணிகளுக்கு தங்க நகைகள் தொடர்பான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளையும், ஆண்கள் 20 கிராம் வரை தங்க நகைகளையும் சுங்க வரி இன்றி கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை, அணிந்து வரக்கூடிய ஆபரணங்களுக்கே பொருந்தும் என்றும், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களில் தயாரிக்கப்பட்ட நகைகளுக்கு மட்டும் இது நடைமுறையில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய விதிகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இந்தியர்களுக்கும், இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.