தமிழகத்தில் அரிய கனிம வள வழித்தடங்கள் – மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
மத்திய அரசின் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் அரிய வகை கனிம வளங்களை மையமாகக் கொண்ட சிறப்பு வழித்தடங்கள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கையின் போது உரையாற்றிய அவர், அரிய கனிம வளங்களின் தேடல், சுரங்கம், செயலாக்கம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தனித்துவமான கனிம வழித்தடங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதற்கான முக்கிய மையங்கள் தமிழகம், ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து, நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், செமிகண்டக்டர் 2.0 திட்டத்திற்கு ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தித் திறனை பெரிதும் உயர்த்தும் என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில், இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்கள் தயாரிப்புக்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கைத்தறி மற்றும் கதர் துறையை வலுப்படுத்தும் நோக்கில், மகாத்மா காந்தி சுவராஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், மும்முனை வளர்ச்சி திட்டம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்த அவர், அந்தத் திட்டத்திற்கும் ரூ.10 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும் என கூறினார்.
போக்குவரத்து துறையில் முக்கிய முன்னேற்றமாக, ஒடிசாவில் தேசிய நீர்வழிப் போக்குவரத்து வழித்தடம் உருவாக்கப்படும் என்றும், நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் நவீன நீர்வழி முனையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதேபோல், சென்னை – பெங்களூர் – ஹைதராபாத் நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 20 புதிய நீர்வழித் தடங்கள் உருவாக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், குவாண்டம் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளில் செயல்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்தியாவில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் ஐந்து முக்கிய பகுதிகளை மையமாகக் கொண்டு மருத்துவ சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும், அதனுடன் மூன்று தேசிய ஆயுர்வேத மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.