தீப்பெட்டி கேட்டதற்கு உயிர்ப்பறிப்பு – போதை இளைஞர்கள் கைது
கடலூர் அருகே தீப்பெட்டி கேட்டதற்காக முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில், தொடர்புடைய இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சோனஞ்சாவடி பகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவர், கடந்த 30ஆம் தேதி தலையில் காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், சங்கொலிகுப்பம் அருகே உள்ள பழைய கட்டடம் ஒன்றில் பதுங்கியிருந்த சுதாகர் மற்றும் முகேஷ் ஆகிய இருவரை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற இருவருக்கும் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மதுபோதையில் இருந்தபோது தீப்பெட்டி கேட்ட பூமிநாதனை கல்லால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.