பதநீர் தொழிலாளி மீது கள் குற்றச்சாட்டு – பானைகள் உடைத்த போலீசார் என புகார்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில், பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளரை கள் இறக்கியதாக கூறி கைது செய்த போலீசார், பதநீர் வைத்திருந்த பானைகளை உடைத்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆம்பூர் அருகே உள்ள கீழ் பணந்தோப்பு கிராமத்தில், அரசு அனுமதி பெற்று பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கி, பனை வெல்லம் தயாரிக்கும் தொழிலை குமரவேல் என்பவர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் பனை மரத்தில் இருந்து சட்டவிரோதமாக கள் இறக்கியதாக கூறி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதனுடன், அவரது தொழிலுக்காக பயன்படுத்தப்பட்ட பதநீர் பானைகளையும் போலீசார் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த குமரவேலின் குடும்பத்தினர், வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் முன்பு திரண்டு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்