பெண்களை கேலி செய்தவர்களை கண்டித்த இளைஞர் – பழிவாங்க துரத்திய கும்பல்; போலீசார் அதிரடி
சேலம் அருகே பெண்களை கிண்டல் செய்த நபர்களை கண்டித்த இளைஞரை தாக்கும் நோக்கில் துரத்திய கும்பலை போலீசார் துரிதமாக செயல்பட்டு மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பாரப்பட்டி பகுதியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில், குமார் என்பவர் தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். அப்போது, அவர்கள் சில பெண்களை அவதூறாக பேசிக் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வா என்பவர், அந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக தட்டி கேட்டுள்ளார். இதன் காரணமாக இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் தலையிட்டு பிரச்சினையை சமாதானப்படுத்தி இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனர்.
ஆனால், இந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு, பழிவாங்கும் நோக்கில் குமார் தரப்பினர், இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் சென்ற செல்வாவை வாகனத்தில் துரத்தி சென்றுள்ளனர்.
இந்த தகவலை அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.