சோழர் அருங்காட்சியகத்திற்கு 13ஆம் தேதி அடிக்கல் – பணிகள் உடனே தொடங்க மக்கள் வலியுறுத்தல்
ராஜராஜ சோழனுக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைப்பது குறித்த அறிவிப்பு அறிவிப்பாகவே முடங்கிவிடாமல், அதனை நடைமுறைப்படுத்தும் பணிகளை தாமதமின்றி தொடங்க வேண்டும் என தஞ்சாவூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2023ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அருங்காட்சியக வளாகத்தில், உலகப் புகழ்பெற்ற சோழ பேரரசர் ராஜராஜ சோழனுக்கு 125 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவவும் தமிழக அரசு திட்டமிட்டது.
அதனைத் தொடர்ந்து, சிலை மற்றும் அருங்காட்சியகம் அமைக்க ஏற்ற இடத்தை தேர்வு செய்வதில் நீண்ட காலம் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, இறுதியாக தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 52 ஏக்கர் பரப்பளவுடைய நிலம் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த 56.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சோழர் அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு இப்போது தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும், இனி காலதாமதம் செய்யாமல் அருங்காட்சியகம் மற்றும் ராஜராஜ சோழன் சிலை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும் என்றும் தஞ்சை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.