கோழி வளர்ப்பு கூலி உயர்வு கோரிக்கை – கோவை ஆட்சியரிடம் கறிக்கோழி விவசாயிகள் மனு
கோழி வளர்ப்புக்கான அடிப்படை கூலியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அன்னூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கோழி வளர்ப்பாளர்கள், தங்களுக்கான வளர்ப்பு கூலி உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், சமீபத்தில் கறிக்கோழி நிறுவனங்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க இயலாது என திட்டவட்டமாக மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கோழி பண்ணை நடத்தும் விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
மேலும், கறிக்கோழி நிறுவனங்கள், கோழி பண்ணை விவசாயிகள் மற்றும் அவர்களது சங்கங்களை இணைத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.