கெங்கவல்லி அருகே இரு தரப்பினரிடையே மோதல் – 2 இளைஞர்கள் தாக்குதல்; தவெக நகர செயலாளர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை அடுத்த தெடாவூர் மணக்காடு கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில், இருதரப்பு மோதல் காரணமாக 2 இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக நகர செயலாளர் உட்பட 15 பேருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் எருதாட்டம் நடைபெற்று வந்தபோது, பழனிமுருகன் என்பவரின் காளை, அஜய் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் வாகனம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, சேதமடைந்த வாகனத்தை சரிசெய்து தருமாறு கோருவதற்காக, அஜய் தனது ஊருக்கு 30-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பழனிமுருகனின் ஊருக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பேச்சுவார்த்தை நடைபெறும்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது.
இந்த மோதலில், பழனிமுருகனுக்கு ஆதரவாக பேசிய இரண்டு நபர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தவெக நகர செயலாளர் அருண் உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சம்பவத்தின் போது இளைஞர்கள் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது.