தமிழக விவசாயிகளின் நலனை முன்னிறுத்தும் மத்திய பட்ஜெட் 2026 – நயினார் நாகேந்திரன் பாராட்டு
மத்திய அரசு தாக்கல் செய்த 2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு கோடி தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், தேங்காய் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்றை மத்திய நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விளையும் முந்திரியை உலகளவில் உயர்தரமான (Premium) பிராண்டாக உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, விவசாயிகளின் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளும், கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த முந்திரி விவசாயிகளும் பெரும் பயன் அடையும் வகையில் இந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.
தமிழக விவசாயிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டங்களை மத்திய பட்ஜெட்டில் அறிவித்த, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.