பட்டியலின அதிகாரி பணியாற்றிய அறையை மாட்டுச்சாணம் பூசி சுத்தம் செய்த திமுக நிர்வாகி – கடும் சர்ச்சை
கோவை அருகே உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அதிகாரி பயன்படுத்திய அலுவலகத்தை மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்ததாக, திமுக தொழிற்சங்க நிர்வாகி மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சசிராஜ் என்பவர் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் சாதி அடிப்படையிலான வேறுபாடு காட்டுவதாக முன்னதாகவே புகார்கள் எழுந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு கிளை மேலாளராக பொறுப்பேற்றதையடுத்து, அவரிடமும் சாதி ரீதியான அணுகுமுறை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சசிராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கையாக மெமோ வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அந்த பட்டியலின கிளை மேலாளரை உக்கடம் கிளைக்கு இடமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு, அவரது அலுவலக அறையின் தரையை ஒரு பணிப்பெண்ணை வைத்து மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் வகையில் வெளியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.