போலி பட்டா மூலம் வீடு கட்டியதாக குற்றச்சாட்டு – பேரூராட்சி தலைவிக்கு எதிராக பாஜக போராட்டம்
நாமக்கல் அருகே, பட்டியலின சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் போலி பட்டா உருவாக்கி வீடு எழுப்பியதாக பேரூராட்சி தலைவிக்கு எதிராக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியின் தலைவியாக திமுகவைச் சேர்ந்த பாப்பு என்பவர் செயல்பட்டு வருகிறார்.
பட்டியலின மக்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை தவறாக பயன்படுத்தி, போலியான உரிமை ஆவணங்களை உருவாக்கி அந்த இடத்தில் தனக்கு சொந்தமான வீடு கட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தை கண்டித்து, காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பாக பாஜக பட்டியல் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது, சம்பந்தப்பட்ட பேரூராட்சி தலைவி உடனடியாக பதவியை விலக்க வேண்டும் என்றும், அந்த பகுதியில் அடிப்படை வசதிகளான கழிப்பிடம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் பாஜக நிர்வாகிகள் கோஷமிட்டு வலியுறுத்தினர்.