கனகசபை விவகாரம் அரசியல் நோக்கில் திருப்பப்படுகிறது – நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பு வாதம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த முடிவுக்கு எதிராக, பொது தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்டறிந்தது.
தீட்சிதர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட சமயக் குழுவுக்குச் சொந்தமான கோயில் விவகாரங்களில் அரசு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை என்றும், கனகசபை தொடர்பான இந்த விவகாரம் அரசியல் காரணங்களுக்காக முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும், விசாரணை ஒத்திவைக்கப்படுமானால் பக்தர்களுக்காக மாற்று ஏற்பாடுகளை அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.