முந்திரி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மர்ம கும்பல் – பண்ருட்டி பகுதியில் பரபரப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, இருசக்கர வாகனத்தில் பயணித்த முந்திரி வியாபாரி ஒருவரை காரில் வந்த கும்பல் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று, அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவருடன் அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், காரில் வந்த சில அடையாளம் தெரியாத நபர்களைக் கண்டதும், அச்சமடைந்த கந்தன், இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர்கள் ராஜேந்திரன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
தீக்காயம் அடைந்த ராஜேந்திரனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கார் ஓட்டுநரான பார்த்திபன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக மணிகண்டன் என்பவர் ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும், தலைமறைவாக உள்ள மணிகண்டன் உள்ளிட்ட மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.