தமிழக அரசின் செயல்பாட்டில் கேள்வி – நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்
தாம்பரத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்படும் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்யும் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் நடவடிக்கையை நேர்மையற்றதாகக் கண்டித்துள்ளது.
அந்த தனியார் கட்டிட உரிமையாளர்கள், அலுவலகத்தை காலி செய்ய உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடத்திய தனி நீதிபதி, அலுவலகத்தை காலி செய்ய உத்தரவிட்டதோடு, கூடுதல் வாடகை தொகையாக 2.18 கோடி ரூபாயை உரிமையாளர்களுக்கு வழங்கக் கட்டளையிட்டார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு அமர்வில், தலைமை வழக்கறிஞர் அரசு, காவல் ஆணையர் அலுவலகத்திற்கான புதிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் காலி செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து, மாநில அரசு பல மாதங்கள் வாடகை செலுத்தாமல், இடத்தை காலி செய்யாத நிகழ்வை நேர்மையற்ற செயல்பாடாகக் குறிப்பிட்டனர். விசாரணையை 2 மாதங்களுக்கு தள்ளி நடத்த உத்தரவிட்டுள்ளனர்.