வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் திரண்ட பெரும் கூட்டம் : அஜித் பவார் உடல் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் உடல், முழு அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த தனி விமானம் தரையிறங்கும் தருணத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் தீப்பற்றியதால், அஜித் பவார் உட்பட பயணித்த ஐந்து பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரின் உடல்களும் அஹில்யாபாய் ஹோல்கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர், அஜித் பவாரின் உடல் காட்டேவாடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வ மரியாதை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் அஜித் பவாரின் சித்தப்பாவான சரத் பவார், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.
வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், அஜித் பவாரின் உடலுக்கு அவரது மகன்கள் தீ மூட்டி இறுதி சடங்குகளை நிறைவேற்றினர்.