அதிமுக முகாமாக மாறிக்கொண்டிருக்கும் திமுக?
அதிமுகவை விட்டு விலகிய முக்கிய நபர்கள் தொடர்ச்சியாக திமுகவில் இணைந்து வருவதால், திமுக தற்போது அதிமுக அணியாகவே மாறிவருகிறது என்ற பேச்சு அக்கட்சிக்குள் பரவலாக எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வரும் திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் உத்தியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அதிமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வர் ராஜா, மைத்ரேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
இந்த நிகழ்வில், அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பல நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இதனால், நீண்ட காலமாக திமுகவில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்வு உருவாகியுள்ளது. இது தொடர்பாக, திமுக நிர்வாகிகள் அமைச்சர்களிடம் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, அதிமுகவில் இருந்து வந்த 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாகவும், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதிமுக பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள் எனவும் திமுக நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதைய அரசியல் சூழலில், “திமுக என்ற பெயரில் ஒரு அதிமுகவும், அதற்கு எதிராக உண்மையான அதிமுகவும்” தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் நிலை உருவாகி வருவதாகவும் திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.