77-வது குடியரசு தின வாழ்த்துகள் – தலைநகர் டெல்லியில் தேசப் பெருமை கொண்டாட்டம்
நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று பெருமை, உற்சாகம் மற்றும் தேசபக்தி உணர்வுடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளை முன்னிட்டு, டெல்லி கடமை பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவண்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பாரம்பரிய முறையில், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்ட திரௌபதி முர்முவை, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றனர்.
தேசியக் கொடி ஏற்றப்பட்ட தருணத்தில், விமானப்படை ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்பட்டு, விழா கோலாகலமாக அமைந்தது. இந்த விழாவில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் உயரிய வீரதீர விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா விருது, விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் அணிவகுப்பு, முப்படை வீரர்கள், கடற்படை, விமானப் படை, சிஆர்பிஎஃப், என்சிசி, என்எஸ்எஸ் ஆகிய படைகளின் மிடுக்கான நடைபாதை அணிவகுப்புகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பிரதிபலிக்கும் வகையில், விமானப்படை ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து தேசிய பெருமையை வெளிப்படுத்தின.
இந்த விழாவில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துருவகை ஹெலிகாப்டர்கள், பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், ட்ரோன்கள், DRDO ஏவுகணை தடுப்பு வாகனங்கள் உள்ளிட்ட இந்தியாவின் நவீன பாதுகாப்புத் திறனை வெளிப்படுத்தும் அலங்கார அணிவகுப்புகள் இடம் பெற்றன.
மேலும், ஒட்டகங்கள், நாய்கள், கழுகுகள் உள்ளிட்ட விலங்குகளுடன் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. குடியரசு தின விழாவில் முதன்முறையாக தமிழ்நாட்டின் நாட்டு நாய்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன.
“ஜல்லிக்கட்டு காளையுடன் – தற்சார்பு வளர்ச்சியில் தமிழ்நாடு” என்ற கருப்பொருளில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பெரும் வரவேற்பைப் பெற்றது.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே நேரத்தில் நடனமாடி தேசபக்தியை உச்சத்திற்கு கொண்டு சென்றனர்.
இருசக்கர வாகனங்களில் சிஆர்பிஎஃப் மற்றும் எஸ்எஸ்பி வீரர்கள் நிகழ்த்திய சாகசங்கள் அனைவரையும் வியக்க வைத்தன.
நிறைவாக, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மூவண்ண கொடியை பிரதிபலிக்கும் பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டதுடன், 77-வது குடியரசு தின விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது.
பின்னர், பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வழியனுப்பி வைத்தார்.
ஜனநாயகம், ஒற்றுமை, தியாகம் மற்றும் தேசப் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும்
இந்த புனித நாளில்,
அனைவருக்கும் 77-வது குடியரசு தின வாழ்த்துகள்!
ஜெய்ஹிந்த்