ஆட்சி அதிகாரப் பங்கீடு குறித்து வெளியில் பேச வேண்டாம் – காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி அறிவுரை
தமிழகத்தில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு தொடர்பான விவகாரங்களை பொதுமக்கள் முன் பேச வேண்டாம் என காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளதாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்று வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆனால், இத்தகைய கோரிக்கைகளுக்கு இடமில்லை என திமுக தரப்பில் தெளிவாக கூறப்பட்டு விட்டது.
அதையும் மீறி, ஆட்சி மற்றும் நிர்வாக அதிகாரங்களில் பங்கேற்பதே தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் அடிப்படை விருப்பமாக இருந்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும், இதே கோரிக்கையை தமிழக காங்கிரஸ் பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், ஆட்சிப் பங்கீடு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையகம் நிர்வாகிகளுக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி தொடர்பான விஷயங்களில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தனிப்பட்ட முறையில் கருத்துகளை கேட்டறிந்ததாகவும், இவ்விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் என இருவரும் தெளிவுபடுத்தியதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.