நெல்லை அருகே தூண்டில் வளைவு கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் 10 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்து வருகின்றனர். மீனவர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, உவரி மற்றும் கூட்டபுளி பகுதிகளில் தூண்டில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் கூத்தங்குழி பகுதியில் 2,500 மீட்டர் நீளத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், தற்போது 500 மீட்டர் அளவிற்கு மட்டுமே தூண்டில் பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடல் சீற்றம் அதிகரிக்கும் நேரங்களில் நாட்டுப்படகுகள் பாதிக்கப்பட்டு சேதமடைவதாக கூறி, அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் மீனவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர்.
மூவரசர் தேவாலயம் முன்பாக தொடங்கிய போராட்டம், கடற்கரை வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றது. இந்த போராட்டத்தில் ஆலய பங்குத்தந்தை, பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.