சூரியனார் கோயில் சாவி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைப்பு – நீதிமன்ற உத்தரவு அமல்
கும்பகோணம் அருகே அமைந்துள்ள சூரியனார் கோயிலின் சாவியை, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அறநிலையத்துறை அதிகாரிகள் திருவாவடுதுறை ஆதீனத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில் ஆதீனத்தின் 28-ஆவது குருமகா சந்நிதானமாக இருந்த மகாலிங்க தேசிக பரமாசாரியார் சுவாமிகள், பெங்களூருவைச் சேர்ந்த பெண் பக்தருடன் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி ஆதீனப் பதவியிலிருந்து விலகினார்.
அதனைத் தொடர்ந்து, அறநிலையத்துறை சார்பில் பட்டீஸ்வரம் செயல் அலுவலர் ஆதீனத்தின் தற்காலிக நிர்வாக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனுடன், ஒரு சிவாச்சாரியாரை நியமித்து தினசரி ஒருகால பூஜை மட்டும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆதீனத்தின் நிர்வாக அதிகாரத்தை மீண்டும் தமக்கு வழங்க வேண்டும் என மகாலிங்க சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின் முடிவில், சூரியனார் கோயில் ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாக தொடரும் தகுதியை மகாலிங்க சுவாமி இழந்துவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், சூரியனார் கோயிலின் சாவியை திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமகா சந்நிதானத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, கோயில் செயல் அலுவலர் நிர்மலாதேவி, சூரியனார் கோயில் ஆதீன மடத்தின் சாவியை திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் வழங்கினார்.