கரூரில் மழையால் சேதமடைந்த ரேஷன் கடை பாதை உடனடியாக சீரமைப்பு – பொருட்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி
கரூரில் மழையால் பாதிக்கப்பட்ட புதிய பகுதிநேர ரேஷன் கடைக்குச் செல்லும் பாதை உடனடியாக சீரமைக்கப்பட்டது. பின்னர் கடை திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
கரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் ஊராட்சி ஒன்றிய எல்லைகளில் புதிதாக கட்டப்பட்ட சமூகக் கூடங்கள், பகுதிநேர ரேஷன் கடைகள் மற்றும் புதிய தார் சாலை பணிகள் உள்ளிட்ட ரூ.4.21 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை திறந்து வைக்கும் விழா இன்று (அக். 23) நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி நத்தமேட்டில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. கடை தற்காலிகமாக நாடக மேடையில் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்றிரவு பெய்த கனமழையால் அப்பகுதியில் சேறும் சகதியுமாக பாதை குளம்பியிருந்தது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, சேற்றை அகற்றி, கிராவல் மண் கொட்டி, தார் பாய் விரித்து சாலையை சீரமைத்தனர்.
விழா சற்று தாமதமாகத் தொடங்கியபோதிலும், முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அங்கு வந்தவுடன் பெண்களின் ஆரத்தி வரவேற்பைப் பெற்றார். பின்னர் ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ ரா.இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், கரூர் கோட்டாட்சியர் முகமதுபைசல், ஊராட்சி உதவி இயக்குநர் சரவணன், வட்டாட்சியர்கள் மோகன்ராஜ், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து காந்திநகர் பிசி குடியிருப்பு பகுதியில் ரூ.45.44 லட்சம் மதிப்பில் மற்றும் பட்டியலின் குடியிருப்பு பகுதியில் ரூ.62.70 லட்சம் மதிப்பில் தார் சாலை பலப்படுத்தும் பணிகளை செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் பல பகுதிகளிலும் புதிய பணிகளை துவக்கி வைத்தார்.