சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கு. பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார்
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ கு. பொன்னுசாமி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 72.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், மலைவாழ் மக்களுக்கான தனி சட்டப்பேரவை தொகுதியில் கு. பொன்னுசாமி பல ஆண்டுகளாக திமுகவினைப் பிரதிநிதித்துவம் செய்தவர். கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர், நேற்று காலை நாமக்கல் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கு. பொன்னுசாமி 1954-ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை குழந்தைவேல், தாய் வெள்ளையம்மாள். மனைவி ஜெயமணி, மகன் மாதேஸ் (39), மகள் பூமலர் (34) ஆகியோர் இவருடைய குடும்பத்தாராக உள்ளனர். கொல்லிமலை இலக்கிராய்ப்பட்டியைச் சேர்ந்த இவர் 9-ம் வகுப்பு வரை கல்வி பெற்றார். இவரது குடும்ப தொழில் விவசாயம்.
கடந்த 2003-ம் ஆண்டு முதல் திமுகவில் தீவிர உறுப்பினராக செயல்பட்ட இவர், 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2021-ம் ஆண்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
கு. பொன்னுசாமி கொல்லிமலை சுற்றுலாத் தலம் மற்றும் தனி தாலுகா அமைப்புக்கு பெரிதும் முயற்சித்தவர். அவருடைய உடலுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, மற்றும் எம்எல்ஏ ராமலிங்கம் உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் சேந்தமங்கலம் அருகே காரவள்ளி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்த உள்ளார்.