திருப்பரங்குன்றம் மலை கல்லத்தி மரத்தில் கொடியேற்றம் – காவல்துறை வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கொடி கட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள, கோயிலின் தல விருட்சமாகப் போற்றப்படும் கல்லத்தி மரத்தில், கடந்த மாதம் 21ஆம் தேதி சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்காக கொடியேற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, திருப்பரங்குன்றம் தீபத்தூண் சம்பந்தமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில் இந்த பிரச்சினை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, கல்லத்தி மரம் உள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானதா அல்லது தர்கா கட்டுப்பாட்டிலா என்ற கேள்வியை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எழுப்பினார்.
மேலும், இது தொடர்பாக கோயில் நிர்வாகம் தர்கா நிர்வாகத்திற்கு எதிராக முறையான புகார் அளிக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலக உள்துறை கண்காணிப்பாளரின் அனுமதி பெறாமல் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நடைபெற்றதாகவும், கல்லத்தி மரத்தில் கட்டப்பட்ட கொடியை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கோரி, கோயில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனுடன், கல்லத்தி மரத்தில் கொடியேற்றம் செய்ததாகக் கூறப்படும் தர்கா நிர்வாகம், அறங்காவலர் குழு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராம். ரவிக்குமார் என்பவரும் தனியாக புகார் அளித்திருந்தார்.
இந்த புகார்களின் அடிப்படையில், கோயில் உள்துறை கண்காணிப்பாளர் சத்தியசீலன் அளித்த புகாரை தொடர்ந்து, பெயர் குறிப்பிடப்படாத சில நபர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.