சென்னையில் ஆர்ப்பாட்டம்: 850 ஊராட்சி செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலாளர்கள் 850 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களையும் சேர்க்க வேண்டும், மேலும் ஓய்வுபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கடந்த மூன்று நாட்களாக சென்னையில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற நிலையில், ஏராளமான ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்நிலையில், அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 850 ஊராட்சி செயலாளர்கள் மீது வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.