5 ஏக்கரில் 1200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் – இயற்கை விவசாயிக்கு பாராட்டுகள் குவியல்
5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே நேரத்தில் 1200-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை விதைத்து வெற்றிகரமாக சாகுபடி செய்துள்ள காரைக்காலைச் சேர்ந்த ஒரு இயற்கை விவசாயியின் முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த விவசாயி யார்? பாரம்பரிய நெல் வகைகளை மீட்க அவர் எடுத்த முயற்சிகள் என்ன என்பதைக் குறித்து இச்செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மகசூலை அதிகரிக்க அறிவியல் வளர்ச்சியின் பெயரில் ரசாயன உரங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், உரத் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் விவசாயத்தை சவாலான நிலைக்கு கொண்டு சென்றுள்ளன. இத்தகைய சூழலில், 5 ஏக்கர் நிலத்தில் 1200 பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டுள்ள காரைக்கால் விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் வரிச்சுக்குடி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான பாஸ்கரே இந்த முயற்சியின் பின்னணியில் உள்ளவர்.
இயற்கை விவசாயத்திலும், விவசாய அறிஞர் நம்மாழ்வார் கருத்துகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பாஸ்கர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த நீண்ட முயற்சியின் விளைவாக, தற்போது 1200-க்கும் அதிகமான நெல் ரகங்களை நேரடி விதைப்பு முறையில் வளர்த்து அறுவடைக்கு தயாராக வைத்துள்ளார்.
5 ஏக்கர் நிலத்தை சிறு பகுதிகளாகப் பிரித்து, சம்பா, பிச்சைவாரி, சிவப்பு கவுனி உள்ளிட்ட பல அரிய நெல் வகைகளைப் பயிரிட்டுள்ள பாஸ்கரின் வயல், ஒரு விவசாய ஆராய்ச்சி மையம் போலவே காணப்படுகிறது.
கருடன் சம்பா, வாழைப்பூ சம்பா, காட்டுயானம், மடுமுழுங்கி போன்ற அரிய பாரம்பரிய நெல் வகைகளையும் அவர் மீட்டெடுத்து, அவற்றை வெற்றிகரமாக சாகுபடி செய்துள்ளார். இந்த நெல் வயலை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர் பாதுகாத்து வரும் விதைகளை அண்டை மாநிலங்களுக்கும் வழங்கி வருகிறார். ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இயற்கை விவசாயி பாஸ்கருக்கு, புதுச்சேரி அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.