மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – சென்னையில் 215 நிவாரண முகாம்கள் அமைப்பு
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, சென்னையில் மொத்தம் 215 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முகாம்களில் தங்கும் மக்களுக்காக 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அக்டோபர் 19 ஆம் தேதி, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேரடி ஆய்வு நடத்திய முதல்வர், மழை முன்னெச்சரிக்கை பணிகளை வேகமாக நிறைவேற்றவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் அறிவுறுத்தினார்.
மழையால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்கும் முகாம்களில் உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மழைநீர் தேங்கும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில், சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பதற்காக 215 நிவாரண முகாம்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. முகாம்களில் உணவு வழங்குவதற்காக 106 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 68 சமையல் கூடங்கள் தற்போது செயலில் உள்ளன.
தொடர்ச்சியான மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று மட்டும் 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம், ‘1913’ என்ற எண் வழியாக வரும் பொதுமக்கள் புகார்கள் உடனடியாக தீர்க்கப்படுகின்றன.
மேலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சியில் பொறியாளர்கள், அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் வாரியத்தின் 2,149 களப்பணியாளர்கள் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது 1,436 மோட்டார் பம்புகள், 478 வாகனங்கள், 489 மர வெட்டும் இயந்திரங்கள், 193 நிவாரண மையங்கள், 150 மைய சமையல் கூடங்கள், மீட்பு பணிக்காக 103 படகுகள், மற்றும் 22,000 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது