திருப்பூர் அருகே கோவில் இடிப்பு – கைது செய்யப்பட்ட பக்தர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
திருப்பூர் அருகே நடைபெற்ற கோவில் இடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில், அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்குரிய, பழமை வாய்ந்த திருத்தலமாக விளங்குவதாக தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், இன்று இந்த பழமையான கோவிலை காவல்துறையைக் குவித்து திமுக அரசு முற்றிலுமாக இடித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அரசின் இந்த ஹிந்து மத விரோதமும், தரமற்ற செயல்பாடும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஹிந்து கோவில்களின் நிலங்களை மீட்கத் திறனற்ற அரசு, பொதுமக்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் பழமையான கோவில்களை தொடர்ந்து இடித்து வருவதாக சாடியுள்ளார்.
யாரை திருப்திப்படுத்த இத்தகைய ஹிந்து மத விரோத நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்கிறது என கேள்வி எழுப்பிய அவர், செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் இடிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீது காவல்துறை நடத்திய பலப்பிரயோகத்தில் காயமடைந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட நிரபராத பக்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள அண்ணாமலை, அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போலி மதச்சார்பின்மை பேசிக்கொண்டு, தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை தொடர்ந்து பறித்து வரும் திமுக அரசு, தனது அதிகார துஷ்பிரயோகத்தை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் அவர் எச்சரித்துள்ளார்.