கணவரின் குடிப்பழக்கம் காரணமாக 2 மகன்களுடன் உயிரை மாய்த்த தாய் – ஆண்டிபட்டியில் சோக சம்பவம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, கணவரின் தொடர் மதுபழக்கம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தாய், தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட தண்டியன்குளம் மலை கிராமத்தில் வசித்து வந்த கூலி தொழிலாளி ஜெயப்பெருமாள், தினசரி மது அருந்தி வீட்டிற்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் சம்பவத்தன்று இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த ஜெயப்பெருமாள், தனது மனைவி தனலட்சுமியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் மனம் உடைந்த தனலட்சுமி, தனது இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.