அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
மாநில அரசு ஊழியர்களுக்காக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் பெற்ற கடைசி மாத சம்பளத்தின் 50 சதவீதம் ஓய்வூதியமாக உறுதி செய்யப்பட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, பணியாளர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பங்களிப்பு வழங்க வேண்டும் என்றும், அதற்கு மேலாக தேவையான கூடுதல் நிதியை முழுமையாக தமிழக அரசே ஏற்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோருக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வுக்கு இணையாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியதாரர் மரணமடைந்தால், அவர் முன்பே குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு, அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தின் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போதும் அல்லது பணிக்காலத்தில் மரணமடையும் போதும், அவர்களின் சேவை காலத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்கு தேவையான குறைந்தபட்ச பணிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும் முன், இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை அடிப்படையிலான ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.