சென்னை புழல் மத்திய சிறையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் இடையே குழு மோதல்
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய கைதிகளுக்கிடையே குழுவாரியான தகராறு ஏற்பட்டது.
இந்த வழக்கில் பொன்னை பாலு, திருவேங்கடம் உள்ளிட்ட பலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், பொன்னை பாலு மற்றும் மணிவண்ணன் ஆதரவாளர்கள் ஒருபுறமும், புதூர் அப்பு தரப்பினர் மறுபுறமும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், பின்னர் கைகலப்பாக மாறியது. நிலைமை மோசமாவதைத் தொடர்ந்து, உதவி சிறை அதிகாரி திருநாவுக்கரசு மற்றும் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கைதிகளை பிரிக்க முயற்சி மேற்கொண்டனர்.
அப்போது ஏற்பட்ட குழப்பத்தில், உதவி சிறை அதிகாரி திருநாவுக்கரசை அந்தக் குழுவினர் தள்ளியதால், அவருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, கூடுதல் சிறைக் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, மோதலில் ஈடுபட்ட கைதிகள் உடனடியாக தனித்தனியாக பிரிக்கப்பட்டனர்.