“முதலில் நாம் மனிதர்கள்” – விமர்சகர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
கரூரில் நடந்த நிகழ்ச்சியில் அழுததற்காக விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “கல்லை கடவுளாக்க தெரிந்தவனுக்கு மனிதனாக மாறத் தெரியவில்லை; முதலில் நாம் மனிதர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று பதிலடி கொடுத்தார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் ‘தமிழ் முழக்கம்’ – ஆளுமை திறன் மேம்பாட்டு பன்னாட்டு பயிலரங்கம் இன்று தொடங்கியது. இந்த விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகி சிவம், உலகத் தமிழ் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, எம்.எல்.ஏ. கோ.தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 38 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பயிலரங்கில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு 18 ஆளுமைகள் வழிகாட்டும் வகையில் பயிற்சி அளித்து வருகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மழையால் பள்ளிகளில் தேங்கிய நீரை உடனே அகற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மின்கசிவு அபாயம் இல்லையா என ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளோம். மழை நிலைமைக்கேற்ப, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.
கரூரில் நடந்த நிகழ்ச்சியின் போது அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுத காட்சி குறித்து சில அரசியல் தலைவர்கள் விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டபோது, அமைச்சர் பதிலளித்தார்:
“உணர்ச்சியும் அறிவும் சமநிலையாக இருக்க வேண்டும். உணர்ச்சி அதிகம், அறிவு குறைந்தால் அது விலங்குக்குச் சமம்; அறிவு அதிகம், உணர்ச்சி குறைந்தால் அது மரத்துக்குச் சமம் என திருவள்ளுவர் கூறியுள்ளார். மனிதனாக இருப்பதே முதன்மை. கல்லை கடவுளாக்க தெரிந்தவனுக்கு, மனிதனாக மாறத் தெரியவில்லை,” எனக் கடும் வார்த்தைகளில் தெரிவித்தார்.