கலீதா ஜியா இறுதிச்சடங்கில் ஜெய்சங்கர் பங்கேற்பு – இந்தியாவின் முக்கிய ராஜதந்திர நகர்வு
வங்கதேசத்தின் முன்னாள் மற்றும் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா அவர்களின் இறுதிச் சடங்கில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். இந்தியா – வங்கதேச உறவுகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஜெய்சங்கரின் இந்த பயணம் இந்தியாவின் முக்கியமான இராஜதந்திர நடவடிக்கையாக மதிப்பிடப்படுகிறது. இதன் பின்னணி மற்றும் முக்கியத்துவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்த வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் முதல் பெண் பிரதமருமான கலீதா ஜியா, தனது 80வது வயதில், கடந்த செவ்வாய்க்கிழமை டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
1991 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் வங்கதேச பிரதமராக பதவி வகித்ததுடன், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவராக இருந்த கலீதா ஜியாவின் மறைவுக்கு அந்நாட்டு இடைக்கால அரசு மூன்று நாள் அரசு துக்கம் அறிவித்துள்ளது. மேலும், அவரது ஜனாஸா தொழுகை நடைபெறும் நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் அதிகாரம் ஏற்றது. அதன் பின்னர், இந்தியாவுக்கு எதிரான அரசியல் மனநிலை வங்கதேசத்தில் வலுப்பெற்றதாக கூறப்படுகிறது.
முகமது யூனுஸின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவுக்கு சாதகமாக இல்லாததால், இருநாடுகளுக்கிடையேயான உறவில் தடுமாற்றமும் விரிசலும் உருவாகியுள்ளது.
இந்தப் பின்னணியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் வங்கதேச பயணம் மிகுந்த அரசியல் மற்றும் தூதரக முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
அதாவது, விலகி நிற்பதைவிட உரையாடலும் ஒத்துழைப்பும் இந்தியாவின் முன்னுரிமை என்ற செய்தியை உலகிற்கு எடுத்துச் சொல்லும் இராஜதந்திரச் சைகையாக ஜெய்சங்கரின் பயணம் பார்க்கப்படுகிறது.
தற்காலிக அரசியல் குழப்பங்களை விட, நீண்டகால தேசிய நலன்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் முக்கியம் என்பதையும் இந்த பயணம் உணர்த்துகிறது.
மேலும், கடினமான சூழலில் கூட வங்கதேச மக்களுக்கும் அவர்களின் ஜனநாயகத்துக்கும் இந்தியா மரியாதை செலுத்துகிறது என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.
வங்கதேசத்தில் உள்நாட்டு அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி வெளிநாட்டு சக்திகள் ஆதிக்கம் செலுத்த முயலும் சூழலில், எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது தலைவரின் நண்பராக இல்லாமல், வங்கதேசத்தின் நண்பனாக இந்தியா தன்னை நிலைநாட்டியுள்ளது.
யார் ஆட்சியில் இருந்தாலும், அரசியலமைப்புக்குட்பட்ட, முற்போக்கான, பயங்கரவாதமற்ற ஜனநாயக சக்திகளை மட்டுமே இந்தியா ஆதரிக்கும் என்ற தெளிவான செய்தியை, கலீதா ஜியாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதன் மூலம் இந்தியா மௌனமாக ஆனால் உறுதியாக தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகள் எப்படியிருந்தாலும், இந்தியா – வங்கதேச உறவுகளை பாதுகாக்கும் இந்தியாவின் நம்பகத்தன்மையையும் தொடர்ச்சியையும் ஜெய்சங்கரின் இந்த வங்கதேச பயணம் எடுத்துக்காட்டுகிறது.