செக் திருப்பி வந்த வழக்கு: இயக்குநர் லிங்குசாமிக்கு ஒரு வருடம் சிறை
செக் மோசடி தொடர்பான வழக்கில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இயக்குநர் லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம், பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 35 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. அந்தக் கடன் தொகையை நீண்ட காலமாக திருப்பிச் செலுத்தாமல் அவர் தாமதம் செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடன் திருப்பிச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட காசோலை வங்கியில் பணம் போதாமையால் நிராகரிக்கப்பட்டதாகக் கூறி, பேஸ்மேன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் குமார் சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் லிங்குசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, லிங்குசாமி உள்ளிட்ட இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், வரும் இரண்டு மாதங்களுக்குள் வட்டியுடன் கடன் தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.