ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதியில் குடும்பத்துடன் விஷமருந்தி நால்வர் உயிரிழப்பு
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோயிலின் பக்தர்கள் தங்கும் விடுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு உட்பட்ட பஞ்சகரை பகுதியில், “யாத்ரி நிவாஸ்” என்ற பெயரில் பக்தர்களுக்கான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், திருவையாறு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கடந்த 10ஆம் தேதி முதல் தங்கி வந்துள்ளார்.
தங்கியிருந்த கால அவகாசம் முடிந்த பிறகும் அறையை காலி செய்யாத நிலையில், இதுகுறித்து விசாரிக்க விடுதி பராமரிப்புப் பணியாளர்கள் அவரது அறைக்குச் சென்றனர். அப்போது, அறைக்குள் குடும்பத்தினர் நால்வரும் உயிரற்ற நிலையில் கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சாமிநாதனின் இரு மகள்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும், தன் மறைவுக்குப் பிறகு அவர்களை யார் கவனிப்பார்கள் என்ற கடும் மனவேதனையில், சாமிநாதன் குடும்பத்தினருடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.