எஸ்ஐஆர் (சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதற்குமான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கின. இப்பணிகள் டிசம்பர் 4ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், வாக்காளர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வசதியாக இரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இறுதியாக, டிசம்பர் 14ஆம் தேதி அனைத்து எஸ்ஐஆர் நடவடிக்கைகளும் நிறைவடைந்த நிலையில், தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. முன்பு இருந்த 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், தற்போது 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதில், 2 கோடியே 77 லட்சத்து 6 ஆயிரத்து 333 பெண்கள், 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 ஆண்கள் வாக்காளர்களாக உள்ளனர்.
மேலும்,
- 26 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் இறந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டதாலும்,
- 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் முகவரி உறுதிப்படுத்த முடியாததாலும்,
- 3 லட்சத்து 39 ஆயிரத்து 278 பேர் இரட்டைப் பதிவுகள் கொண்டிருந்ததாலும்,
மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், நீக்கப்பட்டவர்கள் தங்களது பெயரை மீண்டும் சேர்க்க வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவோ அல்லது இணைய வழியாகவோ விண்ணப்பிக்கலாம் என விளக்கினார்.
மேலும், இரண்டு வாரங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.