மதுரோ ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவின் கடும் அழுத்தம் – பதற்றம் உச்சம்

Date:

மதுரோ ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவின் கடும் அழுத்தம் – பதற்றம் உச்சம்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான அரசை, வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அறிவித்துள்ளது. வெனிசுலா அரசுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவிலான கடும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கக் காரணமான பின்னணி என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பு விளக்குகிறது.

அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையேயான முரண்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. நிக்கோலஸ் மதுரோ ஆட்சி ஜனநாயக மரபுகளை பின்பற்றவில்லை என்றும், அங்கு தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதுடன் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இதுவே இரு நாடுகளுக்கிடையேயான மோதலின் மையக் காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும், உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் வளங்களை கொண்டுள்ள வெனிசுலாவின் எண்ணெய் வருவாய், மதுரோவின் ஆட்சியைத் தக்கவைக்க பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அந்த வருவாய் பெருமளவில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுவதாகவும், இது பிராந்திய பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, வெனிசுலாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் அரசியல் ரீதியான அழுத்தங்களையும் அமெரிக்கா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலடியாக, வெனிசுலா அரசு அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்து, தங்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும், பொருளாதார தாக்குதல்களை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

இந்த பின்னணியில், மதுரோ அரசுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். குறிப்பாக, மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வெனிசுலாவைச் சேர்ந்த அனைத்து எண்ணெய் டாங்கர்களையும் முற்றாக தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், வெனிசுலாவிலிருந்து நடைபெறும் எண்ணெய் கடத்தலை முழுமையாக நிறுத்த அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவு வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், அமெரிக்க சொத்துகளை அபகரித்ததுடன், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் மதுரோ அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிபர் டிரம்பின் உத்தரவின்பேரில், இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அமெரிக்கக் கடற்படை அணிகள் வெனிசுலாவைச் சுற்றி முழுமையாகக் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிடம் இருந்து அபகரிக்கப்பட்ட எண்ணெய், நிலங்கள் மற்றும் பிற சொத்துகள் திருப்பி ஒப்படைக்கப்படும் வரை இந்த அழுத்தங்கள் தொடரும் என டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே, வெனிசுலா கடற்கரைக்கு அருகே சென்ற ஒரு எண்ணெய் டாங்கரை அமெரிக்கப் படைகள் கைப்பற்றி பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த கப்பலில் வெனிசுலா மற்றும் ஈரானிலிருந்து வந்த தடைசெய்யப்பட்ட எண்ணெய் ஏற்றப்பட்டிருந்ததாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த எண்ணெயை அமெரிக்கா தன்னிடம் வைத்துக்கொள்ளும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சமீப காலமாக மதுரோவின் குடும்பத்தினர் மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளும் பெரிதும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலாகக் கருதப்படும் USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு, கரீபியன் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அமெரிக்க பி-1 லான்சர் ரக குண்டுவீச்சு விமானங்களும் வெனிசுலா கடற்கரை அருகே பறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுலா அரசு மேற்கொண்டு வரும் போதைப்பொருள் மற்றும் எண்ணெய் கடத்தலைத் தடுக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர். இருப்பினும், கரீபியன் பகுதியில் நடைபெற்ற ராணுவ தாக்குதல்களில் பலர் உயிரிழந்ததாக வெளியான தகவல்கள் அமெரிக்க செனட் சபையின் கவனத்தை ஈர்த்துள்ளன.

மொத்தத்தில், அமெரிக்கா – வெனிசுலா இடையேயான மோதல் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார கட்டத்திலிருந்து நேரடியான ராணுவ அழுத்த நிலைக்கு நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரோ அரசு சரணடையாத வரை தடைகளும் அழுத்தங்களும் தொடரும் என அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இந்தப் பதற்றம் இன்னும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவரை ‘துரோகி’ என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது – ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்

நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவரை ‘துரோகி’ என கூறுவது ஏற்றுக்கொள்ள...

இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: புதிய காலகட்டத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: புதிய காலகட்டத்தைத் தொடங்கிய பிரதமர்...

இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: இலக்கை எட்டிய பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: இலக்கை எட்டிய பிரதமர் மோடி இந்தியாவிலிருந்து...

மதுரை மாமன்றக் கூட்டம் 10-ந் தேதி நடத்தப்படும் – மாநகராட்சி அறிவிப்பு

மதுரை மாமன்றக் கூட்டம் 10-ந் தேதி நடத்தப்படும் – மாநகராட்சி அறிவிப்பு மதுரை...