இன்போசிஸ் உதவியாளராக இருந்து ஸ்டார்ட்அப் நிறுவன சிஇஓவாக உயர்ந்த தாதாசாஹிப் பகத்
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த தாதாசாஹிப் பகத், சாதாரண பின்னணியிலிருந்தும் அதிசயமான முன்னேற்றத்தைப் பெற்றவர். 10ஆம் வகுப்பு முடித்த அவர், ஐ.டி.ஐ. படித்து, புனேவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
சம்பளம் போதாமையால், பின்னர் இன்போசிஸ் நிறுவனத்தில் உதவியாளராக ரூ.9 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றத் தொடங்கினார். அங்கு கணினியில் பணிபுரியும் ஊழியர்களை கவனித்தபோது, தானும் அந்த வகையான பணியில் சேர வேண்டுமென ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், அந்த வேலைக்கு பட்டப்படிப்பு அவசியம் என கூறப்பட்டதால், மற்ற வழிகளை ஆராய்ந்தார்.
அப்போது சிலர், “கிராபிக் டிசைன் மற்றும் அனிமேஷன் துறையில் திறமை இருந்தால் பட்டப்படிப்பு தேவையில்லை” என அறிவுறுத்தினர். இதை ஊக்கமாக எடுத்த பகத், ஒரு ஆண்டுக்குள் கிராபிக் டிசைன் கற்று முழுமையாக நிபுணராக ஆனார்.
பின்னர் அவர் வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், சிறு தொழில் முனைவோர் ஆகியோருக்கான டெம்ப்ளேட்கள் வழங்கும் இணையதளத்தை உருவாக்கினார். குறுகிய காலத்திலேயே அவரது முயற்சி நாடு முழுவதும் பரவியதுடன், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பையும் பெற்றது.
அவரது சாதனையை கவனித்த பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பாராட்டினார். அதற்கிடையில், ‘boAt’ நிறுவனத்தின் இணை நிறுவனர் அமன் குப்தா பகத்தின் நிறுவனத்தில் ரூ.1 கோடி முதலீடு செய்தார்.
இன்று தாதாசாஹிப் பகத் உருவாக்கிய ஸ்டார்ட்அப், ‘Canva’ போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு போட்டியாக வளர்ந்து வருகிறது. சிறு கிராமத்திலிருந்து பெரிய தொழில் முனைவோராக உயர்ந்த அவரது பயணம், இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும் முன்னுதாரணமாக மாறியுள்ளது.