ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அவர் கட்டாயமாக நேரில் முன்னிலையாக வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் உள்ளிட்ட மொத்தம் 10 பேர் நேரில் ஆஜரானனர்.
அப்போது, உச்சநீதிமன்றம் தமக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை பரிசீலித்த நீதிபதி, ஜாமீன் நிபந்தனைகளில் வழங்கப்பட்ட தளர்வு, நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு பொருந்தாது என்று தெரிவித்தார்.
மேலும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணைக்கு செந்தில் பாலாஜி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் முதல் ஐந்து நபர்களிடம் சாட்சி விசாரணை முடிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, மீதமுள்ள சாட்சிகளின் விசாரணைக்காக வழக்கை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.