திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு – சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாள் உற்சவத்தில், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாகப் போற்றப்படும் இந்தத் தலத்தில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அராதனைகள் நடைபெற்று வந்தன.
கடந்த 3ஆம் தேதி அதிகாலையில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதே நாள் மாலை 6 மணிக்கு, கோயிலின் பின்புற மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஏராளமான பக்தர்கள் தீப தரிசனம் செய்து, வழக்கம்போல் 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.
விழாவின் நிறைவு நாளில், சண்டிகேஸ்வரர் அழகிய அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு தரிசனமளித்தார். இந்த வீதியுலாவை காண திரளான பக்தர்கள் கூடி ஆனந்தம் கொண்டாடினர்.