அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது – சீன அதிகாரிகளை சந்தித்தது வெளிச்சம்
அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களை வைத்திருந்ததுடன், சீன அதிகாரிகளை ரகசியமாக சந்தித்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளர் ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
64 வயதான ஆஷ்லே டெல்லிஸ் மும்பையில் பிறந்தவர். இந்திய வேர்களைச் சேர்ந்த இவர், அமெரிக்க வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு துறைகளில் ஆலோசகராக பணியாற்றியவர். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.
அமெரிக்க எஃப்பிஐ (FBI) புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்ததாவது —
வெர்ஜினியாவில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானப் படை ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இந்த ஆவணங்கள் பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அலுவலகங்களில் இருந்தவை என்றும், அவை சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 2002 முதல் 2025 செப்டம்பர் மாதம் வரை, ஆஷ்லே டெல்லிஸ் வெர்ஜினியாவில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் சீன அரசு அதிகாரிகளை பலமுறை சந்தித்து பேசியது வெளிச்சமிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து எஃப்பிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், டெல்லிஸுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.