‘என்டிசி’ தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க உத்தரவு
தமிழகத்தில் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்டிசி) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஏழு நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா காலத்திற்குப் பிறகு இந்நூற்பாலைகளில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக பாதி ஊதியமே வழங்கப்பட்டு வந்தது. இதனால், கடந்த எட்டு மாதங்களாக ஊதியம் நிலுவையில் இருந்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் எம்.பி. சசிதானந்தம் தலைமையில், எச்எம்எஸ் தொழிற்சங்கத் தலைவர் ராஜாமணி, சிஐடியு பஞ்சாலை சங்க பொதுச் செயலாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் இன்று டெல்லியில் உள்ள ஜவுளித் துறை செயலாளர் நீலம் சாமிராவை சந்தித்து நிலுவை ஊதியத்தை வழங்க கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்ற மத்திய ஜவுளித் துறை, அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு 50%, அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 25%, மற்ற தொழிலாளர்களுக்கு 12.5% ஊதியம் வழங்க உத்தரவிட்டது.
தொழிலாளர்களின் நிலை குறித்து மேலும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.