பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் சார்பில் 53 வேட்பாளர்கள் அறிவிப்பு
பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மற்றும் எதிர்க்கட்சியான மெகா கூட்டணி இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ) தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதேசமயம், லோக் ஜன சக்தி (ராம்விலாஸ்) 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மறுபுறம், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், மற்றும் இடதுசாரி கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 17-ம் தேதி நிறைவடைந்தது. இதற்காக மெகா கூட்டணி சார்பில் மொத்தம் 125 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் —
- ஆர்ஜேடி : 72
- காங்கிரஸ் : 24
- கம்யூனிஸ்ட் கட்சிகள் : 21
- விஐபி : 6
- ஐஐபி : 2
காங்கிரஸ் கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கட்டமாக 48 வேட்பாளர்களை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, மேலும் 5 பேர் அடங்கிய இரண்டாம் பட்டியலை வெளியிட்டது. இதன் மூலம் இதுவரை மொத்தம் 53 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (அக்.21) நிறைவடைகிறது. ஆனால், மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு மற்றும் முதல்வர் வேட்பாளர் தேர்வு குறித்து இன்னும் தெளிவு எதுவும் இல்லை.